தமிழ் விக்கிபிடியாவில் திருக்குறள் பற்றி காண்க.
முழு திருக்குறள் முழு உரை மதுரைத் திட்டம் [PM Project Madurai] வழி காண்க.

பால் வகைப்படுத்திக் காண்க

அறத்துப்பால் 𝄞 பொருட்பால் 𝄞 காமத்துப்பால்


அதிகாரங்கள் வகைப்படுத்திக் காண்க

அதிகாரங்கள்

குறள் எண்ணைக் காண்பி:

பால்: காமத்துப்பால்

அதிகாரம் 1: காமத்துப்பால்

அதிகாரம்: தகையணங்குறுத்தல்
  1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
  2. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து
  3. பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு
  4. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக்கு அமர்த்தன கண்
  5. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து
  6. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்இவள் கண்
  7. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்
  8. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு
  9. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
    அணியெவனோ ஏதில தந்து
  10. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று
அதிகாரம்: குறிப்பறிதல்
  1. இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
  2. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது
  3. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்
  4. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்
  5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்
  6. உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்
  7. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
  8. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்
  9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள
  10. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல
அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்
  1. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள
  2. பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து
  3. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு
  4. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்
  5. வேட் ட பொழுதின் அவையவை
    போலுமே தோட் டார் கதுப்பினாள்
  6. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
    அமிழ்தின் இயன்றன தோள்
  7. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு
  8. வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு
  9. ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்
  10. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு
அதிகாரம்: நலம்புனைந்துரைத்தல்
  1. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்
  2. மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று
  3. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
  4. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று
  5. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
    நல்ல படாஅ பறை
  6. மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்
  7. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து
  8. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மத஧
  9. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி
  10. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்
அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல்
  1. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்
  2. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு
  3. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற்கு இல்லை இடம்
  4. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து
  5. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
  6. கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
    நுண்ணியர்எம் காத லவர்
  7. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து
  8. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து
  9. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னும்இவ் வூர்
  10. உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னும்இவ் வூர்
அதிகாரம்: நாணுத்துறவுரைத்தல்
  1. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடலல்லது இல்லை வலி
  2. நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து
  3. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்
  4. காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை
  5. தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்
  6. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படல்ஒல்லா பேதைக்கென் கண்
  7. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்
  8. நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்
  9. அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு
  10. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு
அதிகாரம்: அலரறிவுறுத்தல்
  1. அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்
  2. மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
    அலரெமக்கு ஈந்ததிவ் வூர்
  3. உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து
  4. கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து
  5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது
  6. கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று
  7. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளும்இந் நோய்
  8. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
    காமம் நுதுப்பேம் எனல்
  9. அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
    பலர்நாண நீத்தக் கடை
  10. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்
அதிகாரம்: பிரிவாற்றாமை
  1. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை
  2. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு
  3. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்
  4. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க்கு உண்டோ தவறு
  5. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு
  6. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை
  7. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை
  8. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
    இன்னாது இனியார்ப் பிரிவு
  9. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ
  10. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்
அதிகாரம்: படர்மெலிந்திரங்கல்
  1. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
    ஊற்றுநீர் போல மிகும்
  2. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
    உரைத்தலும் நாணுத் தரும்
  3. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
    நோனா உடம்பின் அகத்து
  4. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்
  5. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்
  6. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது
  7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்
  8. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்லது இல்லை துணை
  9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
    நெடிய கழியும் இரா
  10. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோஎன் கண்
அதிகாரம்: கண்விதுப்பழிதல்
  1. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாம்காட்ட யாம்கண் டது
  2. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்பது எவன்
  3. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து
  4. பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து
  5. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
    காமநோய் செய்தஎன் கண்
  6. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது
  7. உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்
  8. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணாது அமைவில கண்
  9. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்
  10. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து
அதிகாரம்: பசப்புறுபருவரல்
  1. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க்கு உரைக்கோ பிற
  2. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு
  3. சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து
  4. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு
  5. உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
    மேனி பசப்பூர் வது
  6. விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
  7. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு
  8. பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
    துறந்தார் அவர்என்பார் இல்
  9. பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்
  10. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்
அதிகாரம்: தனிப்படர்மிகுதி
  1. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி
  2. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி
  3. வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு
  4. வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்
  5. நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை
  6. ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலை யானும் இனிது
  7. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்
  8. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்
  9. நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
    இசையும் இனிய செவிக்கு
  10. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு
அதிகாரம்: நினைந்தவர்புலம்பல்
  1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது
  2. எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன்று ஏல்
  3. நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்
  4. யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
    ஓஒ உளரே அவர்
  5. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத்து ஓவா வரல்
  6. மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
    உற்றநாள் உள்ள உளேன்
  7. மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்
  8. எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு
  9. விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து
  10. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி
அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்
  1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
    யாதுசெய் வேன்கொல் விருந்து
  2. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
    உயலுண்மை சாற்றுவேன் மன்
  3. நனவினால் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்
  4. கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு
  5. நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது
  6. நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்
  7. நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
    என்எம்மைப் பீழிப் பது
  8. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
  9. நனவினால் நல்காரை நோவர் கனவினால்
    காதலர்க் காணா தவர்
  10. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
    காணார்கொல் இவ்வூ ரவர்
அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்
  1. மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது
  2. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை
  3. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
    துன்பம் வளர வரும்
  4. காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
    ஏதிலர் போல வரும்
  5. காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை
  6. மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்
  7. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும்இந் நோய்
  8. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை
  9. பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து
  10. பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயும்என் மாயா உயிர்
அதிகாரம்: உறுப்புநலனழிதல்
  1. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்
  2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாரும் கண்
  3. தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்
  4. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்
  5. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்
  6. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
    கொடியர் எனக்கூறல் நொந்து
  7. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
    பூசல் உரைத்து
  8. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்
  9. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்
  10. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு
அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல்
  1. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து
  2. காதல் அவரிலர் ஆகநீ நோவது
    பேதைமை வாழியென் நெஞ்சு
  3. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்
  4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று
  5. செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்
  6. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு
  7. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேன்இவ் விரண்டு
  8. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
  9. உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு
  10. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்
அதிகாரம்: நிறையழிதல்
  1. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு
  2. காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்
  3. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்
  4. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
    மறையிறந்து மன்று படும்
  5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன்று அன்று
  6. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்
  7. நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்
  8. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை
  9. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு
  10. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்
அதிகாரம்: அவர்வயின்விதும்பல்
  1. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்
  2. இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
    கலங்கழியும் காரிகை நீத்து
  3. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்
  4. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு
  5. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்கும்என் மென்தோள் பசப்பு
  6. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட
  7. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்அன்ன கேளிர் விரன்
  8. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து
  9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
  10. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
    உள்ளம் உடைந்துக்கக் கால்
அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
  1. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு
  2. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்நிறைந்த நீர்மை பெரிது
  3. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன்று உண்டு
  4. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
  5. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன்று உடைத்து
  6. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து
  7. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
    முன்னம் உணர்ந்த வளை
  8. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து
  9. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது
  10. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு
அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல்
  1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு
  2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்
  3. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்
  4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு
  5. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து
  6. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை
  7. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து
  8. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு
  9. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்
  10. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று
அதிகாரம்: நெஞ்சொடுபுலத்தல்
  1. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீஎமக்கு ஆகா தது
  2. உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
  3. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங்கு அவர்பின் செலல்
  4. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று
  5. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
  6. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு
  7. நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
    மாணா மடநெஞ்சிற் பட்டு
  8. எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
  9. துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி
  10. தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி
அதிகாரம்: புலவி
  1. புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது
  2. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்
  3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்
  4. ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று
  5. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
    பூஅன்ன கண்ணார் அகத்து
  6. துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று
  7. ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று
  8. நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி
  9. நீரும் நிழலது இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது
  10. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
    கூடுவேம் என்பது அவா
அதிகாரம்: புலவி நுணுக்கம்
  1. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு
  2. ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து
  3. கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று
  4. யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று
  5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்
  6. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்
  7. வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று
  8. தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று
  9. தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று
  10. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று
அதிகாரம்: ஊடலுவகை
  1. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
    வல்லது அவர்அள஧க்கு மாறு
  2. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்
  3. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து
  4. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை
  5. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து
  6. உணலினும் உண்டது அறல்இனிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது
  7. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்
  8. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு
  9. ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா
  10. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்